ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான்


 

ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து,   பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது.

ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.  ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான்.

2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது.

இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் பெருமுதலாளிகளும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு அணிகளை ஏலம் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட் சீனுவாசனும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஷில்பா ஷெட்டியும், டெக்கான் அணியை டெக்கான்கிரானிக்கல் செய்திதாள் நிறுவனமும் 300 கோடி, 400 கோடிக்கு என ஏலம் எடுத்தனர். அதன் பின் வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். உள்நாட்டு வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை ஏலம் விடப்பட்டனர். விரர்களுக்கு ஏற்றாற்போல் 1 கோடி முதல் 6 கோடி வரை ஏலம் போனார்கள். ஏலத்துக்கு பின் மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களுர், சென்னை என பாரததேசத்தின் பல பகுதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.

சில ஆயிரம் முதல் பல ஆயிரம் என டிக்கெட்டுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கும் காலத்தில் இந்தியாவில் வேறு எந்த விவகாரமும் நடக்கவில்லை. இந்திய மக்கள் அனைவரும் சோறு தண்ணியில்லாமல் இந்தவிளையாட்டை காண உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை போல விளம்பரம் செய்யப்பட்டது.

போட்டிகள் நடந்து முடிந்தபோது ஐ.பி.எல் அமைப்பும், அணிகளின் முதலாளிகள் எதிர்பார்க்காத அளவுக்கு பணம் கொட்டியிருந்தது. இந்த மயக்கம் இரண்டாம் ஆண்டுக்கான போட்டியை பிரமாண்டமாக நடத்தியது. அது மட்டுமல்ல வித விதமாக வீரர்களையும் குளிப்பாட்ட முடிவு செய்தனர் அணி முதலாளிகள்.

அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மேட்ச்சை சில வாரங்கள் தள்ளி வையுங்கள் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை விடுத்தார். அதெல்லாம் முடியாது என சூடாக அறிக்கை விட்டார் ஐ.பி.எல்அமைப்பின் தலைவர் லலித்மோடி. அதோடு நிறுத்தவில்லை பாரத தேசத்தில் பாதுகாப்பு இல்லை என சொல்லிவிட்டார்கள் எனக்கூறி பாராத தேசத்திற்கு அப்பால் தென் ஆப்ரிக்காவில் போட்டிகளை நடத்தியது ஐ.பி.எல் அமைப்பு. பணத்தை வாரி குவித்தது.

தற்போது முன்றாம் ஆண்டுக்கான போட்டி பாரத தேசத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் போதும், போட்டி முடிந்த இரவு நேரத்தில் நடந்த விவகாரங்கள் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தின. கடந்த ஆண்டு வெளிநாட்டில்நடந்ததால் அவ்வளவாக தெரியாத விவகாரங்கள் இந்த ஆண்டு வெட்ட வெளிச்சமானது.

ரசிகர்களை கவர்கிறேன் என விளையாட்டு திடலில் பார்வையாளர்கள் பகுதியில் உள்ளாடை தெரியும் பாவாடையுடன் நடன பெண்களின் ஆட்டம் களை கட்டியது. வீரர்கள் சிக்சர்ஸ் அடிக்கும் போது  டிவி கேமராக்களின் பார்வை மங்கைளின் மார்பு பக்கம் திரும்பியது. இதனால் கிரிக்கெட் மீது ஆர்வம்மில்லாதவர்களை கூட இந்த நடன பெண்களின் ஆட்டத்திற்காக பார்க்க வைத்தது.

விளையாட்டு நேரம் முடிந்ததும் வீரர்கள் தங்கிய ஹோட்டல்களில் வீரர்களுக்காக அவர்கள் சந்தோஷ படுத்த பார்ட்டி தருகிறேன் என குட்டி-புட்டிகளை சப்ளை செய்து தூள் பறக்க வைத்தனர். இதனால் விடிய விடிய இந்த விளையாட்டில் கவனம் செலுத்தியவீரர்கள் மைதானத்தில் ஆடிய நிஜ ஆட்டத்தை பார்த்து ரசிகர்களை எச்சில் துப்ப வைத்தது.

சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து போன ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பார்த்து ஏமாந்து நொந்து போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பகுதியில் ஆட்டக்காரிகள் ஆடிய ஆட்டம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்ததோடு கொடுத்த பணத்துக்கு இதையாவுது பார்க்கமுடிஞ்சதே என ஓரளவு மனம் நிம்மதியடைய வைத்தது.

இந்நிலையில் தான் மத்திய அரசையும் தூங்கவிடாமல் செய்து விட்டது டுவிட்டர் இணையதளம். ஐ.பி.எல் உருவாக்க தலைவரான லலித்மோடி டுவிட்டர் தளத்திலுள்ள  தனக்கான பக்கத்தில், அமைப்பில் இந்த ஆண்டு புதியதாக கொச்சி, புனோ அணியை உருவாக்கிய போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சசிதரூர் கொச்சி அணியின் 70 கோடி மதிப்பிலான 20 சதவித பங்குகளை தனது தோழி காஷ்மீர் சுனந்தாவுக்கு தரச்சொன்னார் அதன்படி அவருக்கு தரப்பட்டது என எழுதிவிட்டு போனார்.

வெளியுறவுத்துறை இணையமைச்சரான சசிதரூர், முதலில் அந்த மாதிரி எதுவுமில்லை என்றார், பின் நான் தவறாக எதுவும் பேசவில்லை என்றார், கடைசியாக பங்குகள் தரச்சொன்னதில் எந்த விதி முறை மீறலும் இல்லை என்றார். எதிர்கட்சிக்கள்விடவில்லை. கடைசியில் அவரின் அமைச்சர் பதவியை பறித்தது காங்கிரஸ் தலைமை.

தன் ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியதோடு காட்டிக்கொடுத்த மோடியை விடக்கூடாது என காங்கிரஸ் தன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தது. அந்த ஆரம்பம் பல மத்திய அமைச்சர்களின், அரசியல்வாதிகளின், பெருமுதலாளிகளின், சினிமா பிரபலங்களின் நிம்மதியை அழித்தது.

காரணம் ஐ.பி.எல் லில் உள்ள 10 அணியின் முதலாளிகளில் சிலர் உண்மையான முதலாளிகள் அல்ல. சில மத்திய அமைச்சர்கள், பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் தான் அந்த அணிகளின் முதலாளிகள். ஒவ்வொரு அணியிலும் அரசியல்வாதிகளுக்கு பங்கு உண்டு. (தேசியவாத காங்கிரஸ் தலைவர் கிரிக்கெட் நிர்வாக மன்னன் சரத்பவார், காங்கிரஸ் கட்சியின் விமானத்துறை அமைச்சர் பிரபுஃல் பட்டேல்) இது மத்திய அரசுக்கும் தெரியும்.

இவ்வளவு உறுதியாக சொல்ல மற்றொரு காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 300 கோடி தந்து ஏலம் எடுத்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி(?) 300 கோடிக்கு ஒரு அணியை ஏலம் எடுக்கிறார் என்றால் அவர் சுமார் 1000 கோடிக்கு சொத்து உள்ளவராகயிருக்க வேண்டும் அப்படியிருந்தால் மட்டுமே அவரால் 300 கோடிக்கு ஏலம் எடுக்க முடியும். ஆனால் நடிகை ஷில்பா ஷெட்டி அந்தளவுக்கு வசதியான பணக்கார குடும்பத்தை சார்ந்தவர் இல்லை.

அப்போ அந்த 300 கோடி? அது பெருதொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் கறுப்பு பணம். அந்த பணத்தை வெள்ளையாக்க சினிமா பிரபலங்களை முன்னிறுத்தி இவர்கள் பின்னால் இருந்து பணம் கொட்டியுள்ளார்கள். அதனால் தான் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐ.பி.எல் அமைப்பு மீது இதுவரை சின்ன கணக்கு வழக்கு கூட மத்திய அரசு கேட்கவில்லை. அதோடு இவ்வளவு பணம் புழங்கும் இந்த அணிகளின் உண்மையான உரிமையாளர்கள் யார், யார் என்பது இதுவரை ஜனநாயக நாட்டில் பொதுமக்களுக்கு தெரியாமல் உள்ளது.

தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய குடிமகனுக்கு உண்டு. காரணம், இந்த 80 ஆயிரம் கோடி பணம் ஏதே இவர்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்து ஒருவருக்கொருவர் கை மாற்றிக்கொண்ட பணமல்ல. இந்தியாவின் 110 கோடி மக்களின் பணம்.

நம்நாட்டில் விவசாயம் செய்ய வழியில்லாமல், பணமில்லாமல்  வங்கி வாசலில், நகை கடைகளில், கந்து வட்டிக்காரன் வீட்டில் காத்திருக்கும் விவசாயிகளின், மூட்டை தூக்கம் தொழிலாளியின், சாக்கடை அள்ளும் கூலியாளின் பணம்மது. பதவியை, அதிகாரத்தை தவறான வழியில் வைத்து உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி, அரசு திட்டத்தில் கொள்ளையடித்த மக்களின் பணம். அரசியல்வாதிகளிடமுள்ள இந்த கறுப்பு பணம் தான் இந்த விளையாட்டு மூலம் வெள்ளையாக மாறிக்கொண்டியிருக்கிறது.

நம்நாட்டில் ஒரு வேலை சோற்றுக்கு வழியில்லாமல் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 45 கோடி. இதை மாற்ற பாரத தேசத்தில் யாரையும் காணோம். இந்த பண முதலைகள் தேசத்தின் நலனை பார்க்காமல், பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கலாச்சாரத்தை காலில் போட்டு மிதித்து விட்டு நடக்கும் இந்த மோசடி விளையாட்டு பற்றி மத்திய மாநில அரசுகளுக்கு தெரியும். தெரிந்தும் இந்த பண முதலைகளுக்கு தான் சப்போர்ட் செய்கிறது.

காரணம் இதில் உள்ள அந்த பணம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின், அதிகாரத்தை ஆட்டி வைப்பவர்களின் பணம். அதனால் கண்டுகொள்ளவில்லை.

பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மைதானத்தில் போய் உட்கார்ந்து அங்கு ஆடும் எல்லாவிதமான ஆட்டத்தையும் கண்டு ரசித்து விட்டு வந்தார்கள். பலர் தொலைக்காட்சி பெட்டி முன் அலுவலகத்தில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள். மக்கள்வரிப்பணத்தில் வாழும் இவர்கள் எவருக்குமே இந்த கேளிக்கை விளையாட்டிற்கு கேளிக்கை வரி விதிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை. காரணம் வரி விதித்தால் அது இவர்கள் தான் கட்ட வேண்டும் அதனால் வரி விதிக்கவில்லை.

சில அரசுகள், வரி விதித்தால் அரசு கஜானாவுக்கு போய்விடும். அதனால் அது வேண்டாம் எங்களை தனியே கவனித்து விடுங்கள் என தேர்தல் நிதி, கட்சிநிதி, தனிப்பட்ட நிதியாக வாங்கி விட்டார்கள். இதில் விதிவிலக்கு டெல்லி மாநில முதல்வர்.

டெல்லியில் நடந்த மேட்ச்களுக்கு வரி விதித்து வசூல் செய்து விட்டு தான் மறுவேலை செய்தார்.

இப்படி அதிகாரிகள், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் கண்ணை திறந்து வைத்துக்கொண்டே தூங்குவது போல் மக்களை ஏமாற்றுபவர்கள் தற்போது ஊழல் நடைபெற்றுள்ளது விசாரிக்க வேண்டும், நாடாளமன்ற கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என கூச்சல் போட்டுக்கொண்டு ரகளை செய்வதை தொலைக்காட்சி பெட்டியில் காண்கிறோம்.

நாங்கள் நேர்மையானவர்கள் என காட்டிக்கொள்ள ஒரு அமைச்சரை பலி கொடுத்த காங்கிரஸ். ஐ.பி.எல் அமைப்பின் வருமானம் பற்றி அமலாக்கப்பரிவு, வருமானவரித்துறை போன்றவை விசாரித்து வருவதாக கூறுகிறது. இதுவும் ஒரு விளையாட்டு தான். மக்கள் மடையர்களாக இருந்துகொண்டு இதை காணும் வரை அவர்கள் நாயகர்கள்!

தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு – 2013


உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட …… நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது.

15 ஹெக்டேர் பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழ்ப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், அகேட், அமெதிஸ்ட் போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும்.

இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்.

இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்ற்ய்க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவெ எழுத்தறிவு பெற்று மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன.

எனவே கொடுமணல் என்ற இச்சிற்றூர் சங்ககாலத்தில் மிகச் சிறந்த தொழிற் கூடங்களைக் கொண்ட தொழில் நகரமாக, உள்நாட்டு, வெளிநாட்டு வணிக உரவுகளைக் கொண்ட வணிக நகரமாக, எழுத்தறிவு பெற்ற நகரமாக சமூக, பொருளாதார நிலையில் மேம்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இவ்வகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்ட சான்றுகள் மூலம் உய்த்துணர முடிகிறது.

இவ்வகழாய்வில் ஆய்வு மாணவர்களான முனைவர். வி.பி.யதீஸ்குமார், சி.செல்வகுமார், இரா.ரமேஷ், பா.பாலமுருகன், ஜி.பால்துரை ஆகியோரும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர். தி.சுப்பிரமணியன் அவர்களும் பங்கு பெற்றனர். இவ்வகழாய்விற்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சந்திர கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

குட்டிப்புலி படத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்


1. குட்டிப்புலி படத்தில் முதன் முறையாக கம்பு சுற்றும் விளையாட்டு வீரராகக் களமிறங்குகிறார் சசிகுமார். இதற்காக ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல சிலம்பு வீரரிடம் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார் சசிகுமார். விழுப்புண்களுக்கும் குறைவு இல்லையாம்.
2. இத்தனை காலம் நடனம் ஆடுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டாமல் இருந்த சசிகுமார், இந்தப் படத்தில் செம ஸ்பீடு டான்ஸ் போட்டு வியக்க வைத்திருக்கிறார். ரீமிக்ஸ் பாடல் ஒன்றை இதற்காகவே படத்தில் இணைத்திருக்கிறார்கள்.
3. படத்தில் லெட்சுமிமேனனோடு சகஜமாகப் பேசும் காட்சிகள் இல்லையாம். அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சசிகுமார் உர்ரெனவே இருந்தாராம். நெருங்கிப் பேச முயன்ற லெட்சுமிமேனனுக்கு செம திட்டு விழுந்ததாம்.
4. சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு சசிகுமாரின் சம்பளம் சகட்டுமேனிக்கு ஏறிவிட்டது. ஆனாலும், தனக்கு முதல் முதலாக சம்பளம் நிர்ணயித்த மனிதர் என்பதற்காக ‘வாகை சூடவா’ முருகானந்தம் கொடுத்த தொகையை மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டாராம் சசி!
5. குட்டிப்புலி என்பவர் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒரு மனிதர். அவருடைய உண்மையான கதையைத் தழுவியே குட்டிப்புலி பாத்திரத்தை செதுக்கி இருக்கிறார்கள்.
6. ஒவ்வொரு படத்திலும் பஞ்ச் டயலாக்குக்குப் பதிலாக யதார்த்த வசனம் பேசும் சசிகுமார், இந்தப் படத்தில் பேசும் வசனம் என்ன தெரியுமா… ‘வொய்புதான்டா லைஃப்’
7. படத்தை முடித்த பிறகு ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே தன் சார்பில் போட்டுக் காட்டி இருக்கிறார் சசிகுமார். அவர் இயக்குநர் பாலா. ‘உண்மையான நடிகன்னு நிரூபிச்சிட்டடா’ என கண்கலங்கி பாராட்டி இருக்கிறார் பாலா.
8. குட்டிப்புலி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வேறு எந்த ஹீரோக்களுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். சரண்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அந்தக் காட்சியைப் பார்த்து சசிகுமார் கண்கலங்கி விட்டாராம். ‘சசி என்னோட உண்மையான புள்ளை” என நெகிழ்ந்திருக்கிறார் சரண்யா.
9. இரு கைகளையும் தூக்கியபடி சைக்கிளில் ஹாயாக வருகிற காட்சிதான் ஓபனிங் காட்சி. ஒரே டேக்கில் அசத்தி இருக்கிறாராம் சசிகுமார்.
10. படம் முழுக்க வேட்டி, கைலியில் வரும் சசிகுமார், ஒரே ஒரு காட்சியில் மட்டும் பேன்ட் சர்டில் வருகிறார். தியேட்டரே சிரிப்பொலியில் நனைகிற காட்சியாம் அது.

அந்த முக்கியமான 5 ரகசியங்கள் ?


 

நீங்கள் எப்போது இறக்கத் தொடங்குகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு மிக நேர்மையான பதில்… ‘பிறந்த அடுத்த நொடியில் இருந்து’ என்பதுதானே! ‘நான் உற்சாகமானவன், சாதிக்கப் பிறந்த வன்’ என்றெல்லாம் நீங்கள் எகிடுதகிடு தன்னம்பிக்கை வார்த்தைகள் வாசித்தாலும், நிதர்சன உண்மை அதுதான்.
ஆக, இறப்புதான் (இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்!) நமது இலக்கு என்றால், அந்தப் பயணத்தைப் பக்காவாகத் திட்டமிட வேண்டும் அல்லவா? அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கு முன் நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களை உங்களுக்குச் சொல்கிறார் ஜான் இஸ்ஸோ தனது ‘The Five Secrets You Must Discover before you die’ புத்தகத்தில்.

 

‘இவர் தனது வாழ்நாள் முழுக்கச் சந்தோஷமாகக் கழித்தார்!’ என்று பலரால் சுட்டிக்காட்டப்பட்ட 200 நபர்களைப் பேட்டி எடுத்திருக்கிறார் ஜான். 60 முதல் 106 வயது வரையிலான அந்த 200 பேரின் 18,000 வருட அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்டு, இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் ஜான். ‘வாழ்க்கையில் உங்களுக்கு அதீத சந்தோஷத்தைத் தந்தது எது? வாழ்க்கை யில் நீங்கள் மிக முக்கியமாகக் கருதுவது எதை?’ இவை போன்றவைதான் அவர்களிடம் ஜான் கேட்ட கேள்விகள். அந்தப் பதில்களைச் செதுக்கி, சீராக்கி, வடிகட்டி வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களைப் பட்டிய லிடுகிறார் ஜான். உங்களுக்கும் நிச்சயம் உதவும் ரகசியங்கள்…

1) உங்களுக்கு உண்மையாக இருங்கள்!

தனது 75 வயது ஆயுளில் ஜார்ஜ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை பிசிக்ஸ் புரொஃபசராகக் கழித்திருக்கிறார். அவரிடம் மாணவர்களின் மனப்போக்கு குறித்துக் கேட்டேன். ‘தனது இதயம் செலுத்திய பாதையில் பயணித்தவர்களுக் கும் அந்தப் பாதையைப் புறக்கணித்தவர் களுக்கும் இடையே மலையளவு வித்தியாசத்தை நான் கவனித்திருக்கிறேன். தனது தோளில் ஏற்றப்பட்ட பிறரது கனவுகள், ஆசைகள், லட்சியங்களை வேறு வழியில்லாமல் தூக்கிச் சுமந்த மாணவர்கள், வாழ்நாட்களைக் கழித் தார்கள். ஆனால், தனது மனம் விரும்பிய படிப்பைப் படித்த மாணவர்கள்தான் வாழ்ந்தார்கள். ஆயுளைக் கழிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியா சங்கள் இருக்கின்றன. தனக்கே உண்மையாக இல்லாதவர்கள் பிறருக்கு எப்படி உண்மையாக இருப்பார்கள்?’ என்றார் அந்த புரொஃபசர்.

2) எந்த ஏக்கத்தையும் மிச்சம்வைக்காதீர்கள்!

84 வயது டோனல்ட் ஆறு வருடங்களுக்கு முன்தான் தனது பிரியமான மனைவியை இழந்திருந்தார். மனைவி யுடனான 56 வயது மணவாழ்க்கைதான் தனது ஆயுளின் ஆகப் பெரிய சொத்து என்று புளகாங்கிதப்பட்டார் டோனல்ட். ‘கல்லூரியின் முதல் வருட வாழ்க்கை முழுக்க நான் அநியாயத்துக்கு கூச்ச சுபாவி. அப்போது எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள் அவள். க்ரீம் கலர் ஸ்வெட்டர் அணிந்து மிக மிருதுவான கூந்தலுடனும் தேவதைச் சிரிப்புடனும் வளைய வந்த அவளைச் சுற்றிலும் எப்போதும் அழகிய பெண்களின் கூட்டம்தான். அன்று காலேஜ் டே. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நடனமாடலாம். அவளை என்னுடன் டான்ஸ் ஆட அழைக்கச் சொல்கிறது மனதின் ஒரு மூலை. பலவந்தமாகப் பிடித்துப் பின்னிழுக்கிறது மூளை. ஒரு வேகத்தில் என் கூச்சம் தவிர்த்து அவளிடம் சென்று, ‘நீதான் நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!’ என்றேன். சின்ன ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டே என்னுடன் அப்போது டான்ஸ் ஆடினாள். அதன் பிறகு அடிக்கடி அவளைச் சந்தித்தேன். எனது விருப்பத்துக்குச் சம்மதிக்கவைத்தேன். 56 வருட ஹனிமூன்!

ஒருவேளை அந்த ஆரம்பத் தயக்கம் என்னைத் தடுத்திருந்தால், இன்று மரணப் படுக்கையில் ‘அன்று அவளிடம் எனது ஆசையை வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ’ என்ற ஏக்கம் மிச்சம் இருந்திருக்கும். இப்போது நான் மிகச் சுதந்திரமாக உணர்கிறேன். நான் என் வாழ்க்கையை முழுக்க வாழ்ந்திருக்கிறேன்!’ என்றார் அர்த்தம் நிறைந்த சிரிப்புடன்.

3) அன்பின் வடிவமெடுங்கள்!

டேவிட் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம் விசேஷமானது. ‘எனது தந்தை தனியரு ஆளாக உழைத்து முன்னேறி கோடீஸ்வரனாகி எங்கள் குடும்பத்தையே உச்ச நிலைக்குக் கொண்டுசென்றவர். அவர் தனது மரணப் படுக்கையில் இருந்த கடைசி சில நாட்களில் அத்தனை வருடங்களில் தான் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தனது குழந்தைப் பருவம் முதல் இப்போது வரையிலான புகைப்படங்களைத் தன்னைச் சுற்றிப் பரப்பிவைத்துக் கொண்டார். அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த மனிதர்களுடனான தனது பாசப் பிணைப்பு குறித்து மட்டுமே பேசி நெகிழ்ந்துகொண்டு இருந்தார். அத்தனை பேரின் அன்பைச் சம்பாதித்ததைத்தான் தனது மிகப் பெரிய சாதனையாக நினைத்து, நிறைவான நிறைவை எட்டினார்!’ அந்த நிறைவை எட்டுவதற்கு முதலில் நீங்கள் காதலிக்க வேண்டிய நபர் நீங்கள் தான்!

4) இந்த நொடி, இந்த நிமிடம் வாழுங்கள்!

ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வாழ்க்கை யாகத்தான் கணக்கில்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு இலக்கை அடையும் பயணத்தின் வழித் தங்கல் அல்ல ஒவ்வொரு நாளும்; அந்த நாளே ஓர் இலக்குதான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… குறிப்பிட்ட ஆனால், தீர்மானிக்கப்படாத வருடங்கள்தான் உங்கள் ஆயுட்காலம். அது 40 வருடமோ அல்லது 70 வருடமோ! அந்த வருடங்களின் எந்த ஒரு நொடி கடந்தாலும் அதை மீண்டும் நாம் திரும்பப் பெற முடியாது. உலகின் மிக உன்னத பொக்கிஷம் உங்கள் ஆயுளின் ஒரு நொடிதான். அப்படியிருக்க, அந்த தங்கத் தருணங்களை வெறுப்பு, கோபம், துவேஷம் என்று செலவழிப்பானேன். கொண்டாடுங்கள். உங்கள் சூழல் என்னாவாக இருந்தாலும் அதைக் கொண்டாட உங்கள் மனதைப் பழக்குங்கள்.

93 வயது ஜான் ஒவ்வொரு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் கண்டு களிக்கிறார். அந்தக் குதூகலத்தை 93 வயதில்தான் நாம் அனுபவிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே, அத்தனை வயது வரை நாம் மிஞ்சி இருப்போமா மாட்டோமா என்ற உத்தரவாதம் இல்லாத போது!

5) பெறுவதைக் காட்டிலும் அதிகமாகக் கொடுங்கள்!

அந்தச் சிறிய கிராமத்துக்கு கென் ஒருவர்தான் பார்பர். ஊரில் எந்த நல்லது கெட்டதுக்கும் கென்தான் கத்தியைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். அவரி டம் பேசிக்கொண்டு இருந்தபோது சிம்பிளாக ஒரே வரியில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொன்னார், ‘இந்த ஊரில் யார் இறந்தாலும் நான் சென்று என் வேலையை முடித்த பிறகு தான் இறுதிச் சடங்குகள் துவங்கும். பல சமயங்களில் நான் எனது கத்தியைக் கழுவிப் பெட்டியில் வைப்பதற்குள் பத்து நிமிடங்களில் சடங்குளை முடித்து, கிட்டத்தட்ட இறந்தவரைத் துரத்தியடிப்பார்கள். ஆனால், சில சமயங் களில் 10 மணி நேரத்துக்கும் மேலாக சடங்கு களை நீட்டித்து இறந்தவரைப் பிரிய மனம் இல்லாமல் கண்களில் நீருடன் வழியனுப்பி வைப்பார்கள். காரணம், அவர் தன் வாழ்க்கை முழுக்கப் பிறருக்காக வாழ்ந்து இருப்பார். என் இறுதிச் சடங்கும் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது பேராசையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்காகவே இந்த உலகத்தின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறேன்!’ என்றார்.

இந்த உலகத்தின் மீது ஆசைவையுங்கள்… சொல்லப்போனால் அத்தனை ரகசியங்களிலும் இது மிகவும் சுலபமானது!

நீங்கள் ஸ்கைப் பயன்படுத்துபவரா ? இதனை கட்டாயம் படியுங்கள்! ! !


வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தான்.

இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லைஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது அது தெரியுமா உங்களுக்கு.

மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ்.

ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள் ….

இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரி எளிதாக அவர்களைச் சென்றடையும்.

இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்து விடும்
பின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக் கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

அதனை இயக்குபவர், அங்கிருந்தே, உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படும்.

இதனைத் தவிர்க்க, ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிரு ந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.

ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்


சென்னையில் ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றில் ரவுடி விமல்ராஜுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ரவுடி விமல்ராஜ் வெட்டியதில் தியாகராஜனின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதித்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவில் உயிரிழந்தார். போலீஸ்காரர் தியாகராஜனை வெட்டிய ரவுடி விமல்ராஜ் கைது செய்யப்பட்டார்.