காணாமற் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியும் நியாயமான விசாரணை ஒன்றினையும் வலியுறுத்தியும் வடக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் நடத்தினர்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு யாழ்.பொது நூலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் இறுதி போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் யுத்த காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரியும், நிலஅபகரிப்புக்கு எதிராகவும், மீள்குடியமர்வை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் தமது உறவுகளின் படங்களை கையில் ஏந்தியவாறு அவர்களை மீட்டுத் தருமாறு கோரியும் கதறி அழுதனர்.
இதேவேளை, ஆணையாளர் நவிப்பிள்ளையிடம் தமது பிரச்சினைகளை கூற செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் பொலிஸாரையும் பொருட்படுத்தாது நூலக வாசலருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் அவர்களது ஒழுங்கமைப்பு குழு அவரை நூலகத்தின் பின் வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர். அதனையறிந்த பொலிஸார் தமது கடமைகளை நிறுத்திவிட்டு திரும்பிவிட்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று யாழ். பொது நூலகத்தில் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரஜைகள் குழுக்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.தந்தையை, சகோதரரை இழந்த குழந்தைகளும் அங்கு இருந்தனர்.
அதேவேளை, நூலகத்துக்கு வெளியே யுத்தத்தில் காணாமல் போனவர்களின் உறவினர் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
நூலகத்தை நோக்கி அவர்கள் செல்ல முயன்றார்கள்.
ஆனால், பொலிஸார் அவர்களைத் தடுத்துவிட்டனர்.
காணாமல் போன தனது உறவைத் தேடித்தரக் கோரி ஒப்பாரி வைத்த ஒரு தாய்.
உறவுகளைத் தேடித்தரக்கோரி கெஞ்சி அழும் தாய்மார்.