நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் அதன் தலைவர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர், ‘’தமிழ்நாட்டில் பல்வேறு தடங்களில் பயணித்துவரும் நான், பலதரப்பட்ட மக்களோடு பழகி அவர்களது மனக்குமுறல்கள், காயங்களை கேட்டறிந்ததில் தெரிந்து கொண்டது, தமிழ்நாட்டில் எவரும் தமிழர் இல்லை என்பதுதான். இது வரலாற்று உண்மை. நிகழ்கால நிஜம். பல மாவட்டங்களிலும் சாதியவாதிகள் வாழ்கிறார்கள்.
இந்த மண்ணில் தமிழர்கள் மதவாதிகளாக வாழ்கிறார்கள். இங்கு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா. ஜனதாவை வலிமையான அரசியல் கட்சிகளாக ஆக்கி வைத்து இருக்கிறார்கள். காரணம், மதம். இதுதான் தமிழ் இனத்துக்கு நேர்ந்த அவலம். எண்ணக்கையில்தான் 8 கோடி பேர். இவர்களில் எவரும் தமிழர் இல்லை. எவராவது ஒருவர் இந்த காரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தேவை என்று ஒரு காரணம் சொல்ல முடியுமா? பின் எதற்கு காங்கிரஸ்?
காங்கிரசை மிதவாதம் என்றும், பா.ஜனதாவை தீவிரவாதம் என்றும் சொல்கிறார்கள். இரண்டு பேருமே ஒன்றுதான். பா.ஜனதா காவி கட்டிய காங்கிரஸ். காங்கிரஸ், கதர் போட்ட பா.ஜனதா.முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை காங்கிரஸ் இங்கு பேசினால் கேரளாவில் கம்யூனிஸ்டு வெல்லும். கம்யூனிஸ்டு இங்கு பேசினால் காங்கிரஸ் வெல்லும். வாக்குக்காக தமிழர் உரிமையை விட்டுக்கொடுக்கும் கேவலம் உள்ளது. காவிரி பிரச்சினையிலும் இதுதான் நடக்கிறது.
கடலில் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். யாராவது கேட்கிறார்களா? என் வீட்டு இழவுக்கு வராதவருக்கு எதற்கு ஓட்டு? உலகில் மிக வலிமையான கடற்படை கொண்டது இந்த தேசம். 800 மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை கடற்படை. எதையாவது தடுத்து இருக்கிறதா இந்தியப்படை? பிரான்சில் சீக்கியர் தலைமுடிக்கு தந்த மரியாதையை என் தமிழ்க்குடிக்கு இந்த தேசம் தரவில்லையே.
அணுஉலையை திறந்தால் மின்சாரம் வந்துவிடுமா? அணுகுண்டு மேல் உட்கார்ந்து இருப்பது எவ்வளவு ஆபத்தோ, அதைவிட பேராபத்து அணுஉலை பக்கத்தில் குடியிருப்பது. 2 ஆண்டுகளாக கூடங்குளம் மக்கள் போராடி வருகிறார்கள். ஏன் என்று கேட்க நாதியில்லை. ராதாபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் யாராவது அணுஉலையை திற என்பார்களா?தரமற்ற கல்வி, தரமற்ற மருத்துவம் என எதையுமே தரமாக தராத இந்திய அரசு, அணுஉலை பாதுகாப்பானது என்பதை எப்படி நம்புவது?
விமானம் மோதினாலும் உடையாது என்கிறார்களே, ஒரு விமானத்தில் அப்துல்கலாம், நாராயணசாமி, சரத்குமார் இன்னும் யாரெல்லாம் திறக்கச் சொல்கிறார்களோ, அவர்களெல்லாம் ஏறி அமர்ந்து அணுஉலை மீது மோதி ஒன்றும் ஆகவில்லை என்பதை செய்துகாட்டுங்களேன். நாங்கள் நம்புகிறோம். அமைதியான மக்களை அடக்கி ஒடுக்குவதுதான் இந்த நாட்டில் ஜனநாயகமாக உள்ளது. அந்நிய முதலீட்டால் நாடு மீண்டும் அடிமைப்பட்டு போகும்.
இந்த நிலைகளை மாற்றத்தான் மக்களே! மாற்று அரசியல் புரட்சியை இந்த மண்ணில் கொண்டு வருகிறோம். இது எளிய மக்கள் எடுக்கும் புரட்சி. நாம் தமிழர் கட்சியை நாங்கள் தொடங்கவில்லை. சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய பெருமகனார் தொடங்கிய கட்சி. எந்த நோக்கத்துக்காக அவர் தொடங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற அவர் நிறுத்திய இடத்தில் இருந்து மானப்பிள்ளைகளான நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
தமிழ் மீட்சிதான் தமிழர் எழுச்சி. ஊழலற்ற, நீதியான, நேர்மையான ஆட்சி, இதுதான் எங்களது கொள்கை. எளிமையான பிள்ளைகளான எங்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வலிமையான அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும். இது வரலாற்று தேவை. காலத்தின் கட்டாயம். இதை உணர்ந்து எங்களோடு அணி திரள்வீர்கள் என்று நம்புகிறோம்’’என்று பேசினார்.