இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாக கூறி சத்தியமூர்த்தி பவனை இன்று (23.02.2013) முற்றுகையிடப்போவதாக மே 17 என்ற தமிழ் அமைப்பு அறிவித்திருந்தது.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் இணை போலீஸ் கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த வருவதை அறிந்ததும் ஏராளமான காங்கிரசாரும் சத்தியமூர்த்தி பவனில் திரண்டனர். மாநில தலைவர் ஞானதேசிகனும் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த வந்தால் மோதல் ஏற்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனால் ஜி.பி. ரோடு முனையிலேயே தடுப்பு வேலி அமைத்து முற்றுகை போராட்டத்துக்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த அமைப்பின் தலைவர் திருமுருகன் தலைமையில் காங்கிரசுக்கு எதிராகவும், இலங்கை தமிழர்கள் படுகொலை தொடர்பாகவும் சோனியா, மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரை விசாரிக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினார்கள்.
தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த வந்திருப்பதை அறிந்ததும் சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்த காங்கிரசார் ஆவேசத்துடன் மெயின் ரோட்டுக்கு ஓடி வந்தனர். உடனே போலீசார் நடுரோட்டில் அவர்களை பெரும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினார்கள்.
உடனே அவசர அவசரமாக போலீசார் தமிழ் அமைப்பை சேர்ந்த சுமார் 30 பேரை கைது செய்து வேனில் ஏற்றி பாதுகாப்பாக கொண்டு சென்றனர். காங்கிரசாரை ஞானதேசிகன் சமாதானப்படுத்தி சத்தியமூர்த்தி பவனுக்குள் செல்லும்படி அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் தரப்பில் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கைது செய் கைது செய் தேச துரோகிகளை கைது செய்’ என்று ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் ஜி.பி. ரோட்டில் சுமார் 1 மணி நேரம் பதட்டமும் பரபரபரப்பும் நிலவியது.