வீரப்பனின் வாழ்க்கையை தமிழ், மற்றும் கன்னடத்தில் படமாக்கி வருகிறார் டைரக்டர் ஏ.எம்.ஆர் ரமேஷ். ‘வனயுத்தம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் வீரப்பனாக கிஷோரும், போலீஸ் அதிகாரியாக அர்ஜீனும் நடித்திருக்கிறார்கள்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டரில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.
வீரப்பனின் கதை என்பதால் அதில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இருக்கின்றன. அதனால் இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்தப்படத்துக்கு எதிராக தொடர்ந்த முத்துலட்சுமி வழக்கில், அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை மட்டும் படத்திலிருந்து நீக்கி விட்டு வருகிற 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
இதையடுத்து இந்தப்படத்தை வரும் 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய முழு ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில் படத்தின் டைரக்டர் ஏ.எம்.ஆர் ரமேஷ் இப்படி பல தடைகளைத் தாண்டி வெளிவந்த குஷியில் படம் குறித்தான சில தகவல்களை இன்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்..
அப்போது அவர் “முத்துலட்சுமி இந்தப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று கோருவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல இந்தப்படத்துக்கு எதிராக நக்கீரன் கோபால் அவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அவர் செய்ததிலும் எந்த தவறும் இல்லை. யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,
பல சிக்கல்களை தாண்டி இந்தப்படத்தை வருகிற 14- ஆம் தேதி வேந்தன் மூவிஸ் எஸ். மதன் அவர்கள் ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப்படத்தை ஆரம்பித்த போதே அவருக்காக இந்தப் படத்தை உருவாக்கினேன். இப்போது அவருக்கு பிடித்த மாதிரி நான் இந்தபடத்தை எடுத்திருக்கிறேன். படத்தை ரொம்ப நடுநிலையாக யார் மனதும் புண்படாதவாறு எடுத்திருக்கிறேன்.
யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமில்லை. இந்தப்படத்துக்காக சுமார் 10 வருடங்களாக வீரப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர்களை நேரில் சந்தித்து தகவல்களை சேகரித்திருக்கிறேன். அதனடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்து படத்தை எடுத்திருக்கிறேன். படத்தை பார்த்த சென்சார் போர்டு மெம்பர்கள் படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் முழு வரிச்சலுகையும் இந்தப்படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.
கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.
பிறகு அவரிடம் உங்களுடைய அடுத்த படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று கேட்டபோது “அடுத்து நான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறேன். அதுதான் என் ஆசை. அப்படி எடுத்தால் கண்டிப்பாக ஈழத்து மக்களிடமிருந்து எனக்கு எதிர்ப்பு வராது” என்றார்.